மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான திரு.சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா யகம்பத் தலைமையில் 13.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு.சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா யகம்பத் மற்றும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.எஸ். வியாழேந்திரன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.கோவிந்தன் கருணாகரன், திரு.இரா. சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.துசித பீ. வனிகசிங்க ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான சட்டவிரோத மண்அகழ்வு, மயிலத்தன்னைமடு மாதவனைப் பிரதேச அத்து மீறிய குடியேற்றம் போன்ற விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.மேலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக மேற் கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
இதுதவிர இம்மாவட்டத்தில் மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள் நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம், விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள், ஐரோட் திட்டங்கள், உருகாமம் கித்துள் குளங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் கொள்ளலவினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவது தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இம்மாவட்டத்தில் நடாத்தப்பட்ட முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வொருங்கிணைப்புக் கூட்டத்தில் மாவட்டத்தின் பெரும்பாலான உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.