கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் வாழைச்சேனை ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் அவர்களின் முயற்சியின் பேரில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் 06.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊடகவியலாளர்கள் கடந்த சிலநாட்களாக தனிமைப்படுத்தலில் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளதால் கல்குடா மீடியா போரம் பணிப்பாளர் அவர்கள் அரசாங்க அதிபரிடம் தங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்குமாறு விடுத்த வேண்டுகொளுக்கிணங்க அப்பகுதி ஊடகவியலாளர்களுக்கான உலர் உணவுப்பொருட்களும் கைகளை தொற்று நீக்கும் திரவங்கள் முகக்கவசங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் மேம்படுத்தல் பணிகளில் செயற்பட்டுவரும் சேகிள் தன்னார்வுத் தொண்டு நிறுவன இளம் பெண்கள் பிரிவு வழங்கிவைத்தது. இந் நிகழ்வில் சேகிள் அமைப்பின் பிரதிநிதிகளான அஜானி காசிநாதர் மற்றும் வசந்தகலா பிரதீபன் எஸ்.ஏமல்டா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
சேகிள் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமானது மட்டக்களப்ப மாவட்டத்தில் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் மேம்படுத்தும் பணிகளுடன் அனர்த்தகால உதவிகளையும் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது. கடந்தவாரம் தொழில் பாதிக்கப்பட்ட சிகையலங்கார உரிமையாளர்களுக்கு என 225000 ரூபாய் பெறுமதியான 150 உணவுப்பொதிகளை மாவட்ட செயலாளரிடம் வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.