மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 08.09.2020 அன்று 10.00 மணிக்கு மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நுண் கடன் திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களினால் தனியார் நிறுவனங்களுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுண் கடன்களை மீழப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மாவட்டத்தில் முன்னெடுக்க முடியுமே தவிர புதிய கடன்கள் வழங்கப்படக்கூடாது என்றும் இதனை பிரதேச செயலாளர்கள் கண்கானித்து அறிக்கையிடப்படல் வேண்டும் என அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
அதனை அடுத்து மாவட்டத்தில் 35 அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முன்னேற்ற மீளாய்வினை முன்வைத்தனர். மொத்தத்தில் 124 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்தினுள் கல்வி, சுகாதார, விவசாய, வாழ்வாதாரம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்ற துறைகளை உள்ளடக்கியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் மக்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக அவர்களாக முன்வந்து மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கியமைக்கு அனைத்து அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அரசாங்க அதிபர் நண்றியினை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.