கிராம மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், உளவளத்துனை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் 30 பேர் கொண்டு அமைக்கப்பட்ட சமூக சேவைகள் பணி அணி கடந்த 2018,2019 காலப்பகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவில் செயற்படுத்தப்பட்டது.
இப்பணி அணியின் பரீட்சாத்த செயற்பாடு வெற்றியளித்துள்ளதுடன் இதன் அனுபவத்தினைக் கொண்டு யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மட்டக்களப்பில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளைத் தெரிவு செய்து தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்கு இப்பணியினை மேற்கொள்ளத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 18.08.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக சேவைகள் பணி அணியினரின் நோக்கு நிலை விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. இப்பணியணியினரின் அர்பணிப்புடனான செயற்பாட்டுடன் எதிர் காலத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ. குகதாசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யுனிசெப் மற்றும் சர்வோதய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.