மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள புடவைக்கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான பங்குதார்கள் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா அவர்கள் தலைமையில் 13.08.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் ஒன்றான மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள புன்னக்குடா முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்படவேண்டிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையினைத் தயாரிப்பதற்கான தகவல்களைப் பெறும் விசேட கலந்துடையாடல் சம்மந்தப்பட்ட சகல திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் நாட்டில் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் புன்னக்குடாவில் அமையப்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இவ்வலயத்தினை அமைப்பதற்குத் தேவையான காணி அடையாளம் காணப்பட்டு காணி சீர்திருத்த ஆணையத்தினால் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தினை அமுல்படுத்தும் போது எதிர்கொள்ளும் சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை இனங்காணும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட இச்சந்திப்பில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. எச்.எம். ஜயசுந்தர கலந்து கொண்டு சம்மந்தப்படப்ட திணைக்களங்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது அனைத்து திணைக்களங்களினதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்விசேட கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் திரு.எஸ். சத்குனலிங்கம், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.என். வில்வரட்னம், மற்றும் கசல திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.